உறங்காதே கண்ணாளா (கதை)

உறங்காதே கண்ணாளா  
                                              - அரங்க கனகராசன். 

                                                                               (கதைத் தொடர் -1) 

பாழடைந்த வீடு   
--------------------------

ருட்டறை என்று சொல்லமுடியாது ...

எங்கோ தெருமுனைக்  கம்பத்து விளக்கின் ஒளிக்கீற்று கதவிடுக்கின் வழியே ஊடுருவுவதால் மெல்லிய இருள் சூழ்ந்த அறை என்றும் கூறலாம்

இரவு பதினோரு மணி.

மதிவாணனும், கயல்விழியும் யாரையோ எதிர்ப் பார்த்து காத்திருந்தனர்...

மெல்லிய இருளில் ஒருவரை ஒருவர் பார்க்க முடிந்தது...

மதிவாணன் நெற்றியை உயர்த்தினான்...

கயல்விழி உதட்டை நெளித்து கவலை தோய்ந்த பார்வையைப் பரப்பினாள்...    

மணி ஒன்று!

மிக மெதுவானக் குரலில் பேசினாள் கயல்விழி : "கிளம்புவோமா"

மதிவாணன் இன்னும் சற்றுப் பொறு என்பது போல் தலையசைத்தான்...

அவளோ,"நேரம் கடந்துக் கொண்டிருக்கிறது... இன்னும் நமது காத்திருப்பு வீண்" என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கியை எடுத்து இடுப்பில் சொருகினாள்.

மதிவாணனும்ஏதும் பேசாமல்  துப்பாக்கியை எடுத்துக் கொண்டான்... 

ஆளரவமற்ற - அமைதியும் இருளும் சூழ்ந்திருந்த - அந்த நேரத்தில் - பாழடைந்த  அந்த வீட்டிலிருந்து - ஓசை எழாதவாறு பதுங்கிப் பதுங்கி கயல்விழியும், மதிவாணனும், பின்புற மதில் ஏறினர்  குதிக்க!...

(துப்பாக்கியோடு எங்கே கிளம்பினார்கள் )




உறங்காதே கண்ணாளா  
                                              - அரங்க கனகராசன். 

                                                                      (கதைத் தொடர் -2) 
முன்கதை :
பாழடைந்த வீட்டிலிருந்து இருளோடு கயல்விழியும், மதிவாணனும் துப்பாக்கியோடு மதில் ஏறினார்கள்...

மந்தியூர்
-------------

மதில் மீது  தவ்வி ஏற முற்படும்போது மதிலுக்கு மறுபுறத்திலிருந்து யாரோ ஏற முற்படும் ஓசை  இருளோடு உரசி கேட்க, கயல்விழியும், மதிவாணனும் மதில் ஏறாமல் தரையோடு பதுங்கினார்கள்...

மறுபுறத்திலிருந்து ஓர் ஒருவம்  உள்ளே குதிக்க-
மதிவாணன் பாய்ந்து அவ்வுருவத்தை பின்பக்கமாக மடக்கினான்...

கயல்விழி அவ்வுருவத்தின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி முனையை வைக்க -

"மதி, மதி நான் மணிமாறன்"

"நீயா? இந்த பக்கம் ஏன் வந்தே"

"அந்தப்பக்கம் ஆள் நடமாட்டம் இருக்கு "

"சரி, செங்கொடி எங்கே?"

"தெரியாது... செங்கொடிகிட்டேருந்து ஒருதகவல் மட்டும் கிடைச்சது ... அதை கொடுக்க நா வந்தேன்... நீங்க கிளம்பறதுக்கு முன்னாடி இதைத் தரச் சொன்னாங்க... "

மடிக்கணினியை நீட்டினான்.

கயல்விழி வாங்கி, கணினியை இயக்கினாள்...

"சரி, உனக்கு அடுத்து என்ன வேலை?''

"தெரியாது... மறுதகவல் வரும் வரைக்கும் என்னை இங்கே இருக்கச் சொன்னாங்க"

கணினியில், உலகக்கோடி என்பவனின் படம் திரையில் தெரிந்தது.

"மதி இதைப் பாருங்க"

மதிவாணன் பார்த்தான். இது மந்தியூர் உலகக் கோடி! ஆனா, நமக்குக்  கொடுத்த வேலை"

கயல்விழி மீண்டும் கணினியைத்  தட்டினாள்.

"கயல், மதி ரெண்டு பேரும், உங்களுக்கு ஏற்கனவே கொடுத்த வேலையை இப்ப செய்ய வேண்டாம்...  மந்தியூர் போங்க... அங்கே புளியமரத்து அடியில் இளங்கோ சந்திப்பார்... வெற்றியோட திரும்புங்க!"

மடிக்கணினியில் செங்கொடியின் குரல் ஒலித்தது...

மேலும் மந்தியூருக்கு எந்த வழியில்  செல்ல வேண்டும் என்ற குறிப்பும், சிலக்  குறியீடு எண்களும் இருந்தன.

மடிக்கணினியில் இருந்தத்  தகவலை அழித்துவிட்டு  மீண்டும் மணிமாறனிடம் மடிக்கணினியைக் கொடுத்துவிட்டு இருவரும் மதில் ஏறி மறுபுறம் குதித்தனர்...         

(மந்தியூரில் என்ன வேலை?)


உறங்காதே கண்ணாளா  
                                              - அரங்க கனகராசன். 

                                                                      (கதைத் தொடர் -3) 
முன்கதை :
  மந்தியூர் செல்ல வந்த உத்தரவின்படி,  கயல்விழியும், மதிவாணனும் புறப்பட்டனர் மதில் வழியே குதித்து...

கிழிந்த முந்தானையால்...
-------------------------------------

கருக்கல்  பொழுது...
விடியலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தது நெல்லூர்...

மெலிந்துக் கொண்டிருக்கும் இருட்டின் கடைசி நொடிகளின் போது, மாரியம்மா முன்னே கைக்குழந்தையுடன் நடக்க, சிவக்கொழுந்து மஞ்சள் பையோடு அவளைப் பின் நடந்துக் கொண்டிருந்தான்...

காகங்கள் கரையத் தொடங்கி படபடவென சிறகடித்து மரங்களைவிட்டு வெளியேறாமலும் -

பறவைகள் கூட்டிலிருந்து புறப்படாமலும் ஓசையிட்டுக் கொண்டிருந்தன மழைத்தூறலால்!..

அடர்ந்த மரங்கள் கொண்ட நெல்லூரின் பச்சை நிறம் காண கதிரவனுக்கு வழிவிட்டு,   கடைசி இருளின் மெல்லியப்  படலம் விலகிக் கொண்டிருந்தப் போதிலும் மேகமூட்டம் கதிரவனுக்கு வழிவிட மறுத்துவிட்டது...

வீல் வீல் என அழும் குழந்தையின் பசியைப் போக்க அவளிடம் தாய்ப் பாலில்லை...

அதனால்; குழந்தையை    ஆறுதல் படுத்த வறண்ட குரலில் ஆரிராரோ பாடிக்கொண்டே குழந்தையின் முதுகை வருடியபடியே நடந்தாள் மாரியம்மா!

அவர்களின் நடையில் சிறுது வேகம் இருந்தது...

பொழுதுப்  புலர்வதற்குள் ஊர் எல்லையைக் கடந்து விட வேண்டுமென்ற வேகம்...

ஆனாலும்; ஏரிக்கரை மேட்டின் பாதையில் விழுந்துக் கொண்டிருந்த மழைத்  தூறல்கள் மண்ணை இலகுவாக்கி வழுக்கலாக மாற்றிக் கொண்டிருந்தன...

மழையில் குழந்தை நனைந்து விடக்கூடாதென்று, கிழிந்த தனது முந்தானையால் குழந்தையை போர்த்தி விட்டாள்.

மனைவி நனைத்து விடக்கூடாதென்று தனது நைந்த கைலியை அவிழ்த்து மாரியாம்மாவின் தலைக்கு போர்த்தினான் சிவக்கொழுந்து!

அப்போது வழுக்கல் பாதையில் விழவிருந்த மாரியம்மாவை கைத் தாங்கலாக ஏந்தியபோது -

"என்ன சிவக்கொழுந்து, அதிகாலையிலேயே ரெண்டுபேரும்  புறப்பட்டாச்சுப் போலிருக்கு"

எரிக்கரையின் சரிவு சந்து பாதையிலிருந்து மிதிவண்டியில் வந்துகொண்டிருந்த டேவிட் கேட்டான்...

இருவருமே டேவிட்டைப் பார்த்தார்கள்... 

(புலர்வதற்குள் ஊரைவிட்டு ஏன் போகிறார்கள்...)
(தொடரும்)


உறங்காதே கண்ணாளா  
                                              - அரங்க கனகராசன். 

                                                                      (கதைத் தொடர் -4) 
முன்கதை :
 கைக்குழந்தையோடு மாரியம்மாவும், சிவக்கொழுந்துவும் விடிவதற்குள் ஊரை விட்டு வெளியேறுகையில்  டேவிட் கூப்பிட்டான்...

4 - உள்ளூர்க்காரனுக்கு வேலையில்லை !
--------------------------------------------------------------

"டேவிட்... ஏரியில் குதிச்சு சாகலாம்னு இருந்தோம்... குழந்தையை சாகடிக்க மனசு வரலைப்பா..."

சிவக்கொழுந்து கண்ணீர் மல்கியது...

குழந்தையின் அழுகுரல் அதிகரித்தது...

"அண்ணே, நம்ம ஊர்லே பிழைக்க முடியாதுப் போலிருக்குண்ணே!..." - பேச முடியாமல்  அழுதாள்...

"ஆமா மாரியம்மா!... என்ன செய்றதுன்னு தெரியல...     இந்தா பத்து ரூபா இருக்கு... போற வழியிலே குழந்தைக்கு பால் வாங்கிக் குடுத்துரு... நான் பண்ணையார் கிட்ட போய் வேலை இருக்குதான்னு கேக்க போறேன்"

டேவிட் நீட்டிய, பத்து ருபாய் நாணயத்தை மாரியம்மாள் வாங்கிகொண்டாள்.

"டேவிட், பண்ணையார் நமக்கு வேலைத் தரமுடியாதுனு  சொல்லிட்டாருப்பா... " - சிவக்கொழுந்து

"ஏண்டா"

"நான் நேத்தே வேலைக் கேட்டு பண்ணையார் வீட்டுக்குப்  போயிருந்தேன்... வேலைக்கு வெளியூர் ஆளுக வராங்கனு சொல்லிட்டார்"

"அப்ப, நம்ம பொழப்பு என்ன ஆகறது?... நீ சொன்ன மாதிரி நாம எல்லாரும் சாக வேண்டியது தானா?"

அப்போது மாட்டுவாண்டி ஒன்று வந்துகொண்டிருந்தது.

"என்ன நெல்லூர் மக்கா, ஏரிக்கரையில் நின்னுதா பேசுவீங்களாக்கும்... வழிய குறுக்காட்டி நின்னுட்டா  வண்டி வாகனம் போக வேணாமா..."

"போ... போ... இத்தனை இடம் பத்தாதா ராமசாமி வண்டிக்கு! ஆமா வண்டி எதுவரைக்கும் போகுது"

"எங்கே போகப் போவுது?... ஆத்தங்கரையில் அள்ளுன மண்ணு இருக்கு... போய் வித்துட்டு வரலாம்னு போறேன்... நாம சாப்பிடறமோ இல்லையோ... மாட்டுக்கு தீவனம் போட்டாகணுமே... ஏண்டா சிவக்கொழுந்து  ஒத்து நில்லு... மந்தியூர் மாதிரி வண்டி ஏதாவது வந்து வெடிச்சிறப் போவுது..."

"மந்தியூர்லே என்ன?"

"அட போங்கடா... டி வி பொட்டியில் சேதி சொல்லிட்டுருக்காங்கடா... நீங்க கேக்கலையா?"

"என்ன அண்ணே" - மாரியம்மா கேட்டாள்.

மந்தியூரில் லாரி வெடித்து நூற்றுக்கும் அதிகமானோர் பலி என்ற தொலைக்காட்சி செய்தியைத்தான் மாட்டு வண்டிக்காரன் சொன்னான்...

(மந்தியூர் லாரி வெடி ஊடகங்களின் பார்வையை ஈர்த்தது) 
(தொடரும்)




உறங்காதே கண்ணாளா  
                                              - அரங்க கனகராசன். 

                                                                      (கதைத் தொடர் -5) 
முன்கதை :
 மந்தியூரில் லாரி வெடித்ததாக வண்டியோட்டி நெல்லூரில்  கூறினான்

5 -  'எங்கள் மக்களின் வேலையைப் பறிக்காதே' 
---------------------------------------------------------------------

மந்தியூர்-
ஆளரவமற்ற காடு.
விடியலுக்கு இன்னும் நேரமிருக்கிறது...

காட்டின் இருளினூடே கயல்விழியும், மதிவாணனும் புளியமரத்தை அடைந்தார்கள்...

யாருமே தென்படவில்லை.

இருவரின் பார்வையும் மெல்லிய இருளைத் துளைத்துக் கொண்டிருக்கையில்

'சலங்' 'சர சர' என்ற மொறுவலுடன் புளியமரத்திலிருந்து இளங்கோ குதித்தான்...

கயல்விழி துப்பாக்கியை சுடுநிலையில் நீட்டினாள்.

இளங்கோ ஒரு குறிப்பு எண் சொன்னான்.

கயல்விழியும் மறு எண் சொன்னாள்.

இளங்கோ இருவருவரிடமும் கைகுலுக்கி, பரந்த மார்பை உயர்த்தி கட்டை விரலை காட்டிவிட்டு,  முன்னே நடந்தான்.

புதர்களுக்கு நடுவே சிறுகுடிசைக்குள் மூவரும் நுழைந்தார்கள்.

இளங்கோ சிறிய கைபேசிப் போன்ற ஒரு கருவியை இயக்கினான்.

" இது  நுண்தகடு ஏவுப்பொறி... இந்தத்  தகடை நேற்றே  லாரிக்குள் ஏவிட்டேன் ...  இப்ப, லாரி எந்தத் திசையில் எங்கே இருக்குனு நாம பாக்கலாம்..."

இன்னொரு கருவி எடுத்து மதிவாணனிடம் கொடுத்தான்...

அதில் லாரி ஒன்று தெரிந்தது...
உலகக்கோடியின் வீட்டருகே இருப்பது தெரிந்தது.

"நாங்க என்ன செய்யணும்?'

"கயல்விழி, நீங்களும்  மதிவாணனும் தனித்தனியா  போங்க... மந்தியூர் கூட்டு சந்திப்பில் பிரியும் எந்தத் தெருவில் லாரி நுழையும்னு  தெரியாது... மதி, நீங்க வடக்குவீதியில்  காத்திருங்க... கயல்விழி நீங்க கிழக்கு வீதியில் காத்திருங்க..."

இருவரும் தலையசைத்தார்கள்...

"இந்தத் திரையில்  லாரி  எங்கே வருதுனு துல்லியமா தெரிஞ்சுக்கலாம்... லாரி வரும் திசைப் பார்த்து ரெண்டு பேரும் காத்திருக்கணும் தனித்தனியா... ஆள் நடமாட்டம்  இருக்கக்கூடாது... பொதுமக்களுக்கு சேதம் ஆகக்கூடாது... லாரிக்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளி ஒரு கிலோமீட்டர் இருக்கும்
போது சிவப்பு விளக்கு எரியும்... பொதுமக்கள் நடமாட்டம் இருந்தா ஒன்னும் செய்யாதீங்க... நடமாட்டம் இல்லாத பகுதினு உறுதி செஞ்சுட்டு இந்த சிவப்புப்  பொத்தானை அழுத்துங்க, போதும்... லாரி சுக்குநூறாயிரும்... ம்... கிளம்புங்க"

இருவரும் கிளம்பும் போது இளங்கோ சொன்னான் :
"இது நம்முடைய முதல் கண்டுபிடிப்பு... இந்த கண்டுபிடிப்பு வெற்றியடைஞ்சா  நமக்கு வெற்றிமுகம் தான்"

கயல்விழி ஒரு கருவியோடு இருசக்கர வாகன மொன்றில்  புறப்பட்டாள்...

மதிவாணனும் இன்னொருக்  கருவியுடன் வேறு வண்டியில் புறப்பட்டான்...

இளங்கோ மாட்டுத் தொழுவம் சென்றான் படுக்க!...


நேருக்குநேர் சென்று மனித வெடிகுண்டு போல்  தாக்குதல் நடத்த வேண்டியதில்லை.

கையிலிருக்கும் கருவியின் பொத்தானை அழுத்தினால் போதும்...

ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கும் இலக்கை வெடிக்கச் செய்துவிடலாம்...

கயல்விழி கச்சிதமாக முடித்தாள்.

சில மணிநேரங்களில் மந்தியூரில் ஊடகங்கள் குவிந்தன...

"மந்தியூரில் இருந்து நெல்லூருக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற லாரியொன்று  வெடித்து சிதறியது... சுமார் நாற்பதுத் தொழிலாளர்கள் லாரியோடு கருகி சடலமாகி விட்டதாகத் தெரிகிறது... 

சம்பவம் நடந்த இடத்தில்  'எங்கள் மக்களின் வேலையைப் பறிக்காதே' என்ற வாசகங்கள் அடங்கிய அச்சடித்த காகிதத் துண்டுகள் கிடந்தன... அவற்றைக்  கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்"

(கயல்விழியின் தாக்குதல் யாருக்காக?) 
(தொடரும்)



உறங்காதே கண்ணாளா
                                        - அரங்க கனகராசன். 
(கதைத் தொடர் -6)
முன்கதை :
லாரி வெடித்து நாற்பது பேர் சாம்பலாயினர்.
6 - போலீஸ் சுற்றி வளைத்தது..
.------------------------------------------------
உலகக்கோடி ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார்
உலகக்கோடி : " ஜெய் மந்தியூர்... மந்தியூர் மாதாக்கி ஜே... எதிர்க்கட்சிகள் தீவிரவாதிகளோடு கூட்டு வைத்திருக்கிறார்கள். என் மீது களங்கம் கற்பிப்பதற்காகவே இந்த கொடூரச் செயல் செய்திருக்கிறார்கள்... "
நிருபர் : நெல்லூர் மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதமாக, நீங்கள் மந்தியூர் மக்களுக்கே நெல்லூரின் வேலை வாய்ப்பை வழங்குவதாக புகார் தெரிவிக்கிறார்களே... அதன் எதிரொலியாகத்தான் மந்தியூரிலுந்து நெல்லூருக்கு வேலைக்குப் போன அப்பாவி தொழிலளார்கள் படுகொலைக்கு உள்ளானதாக கூறப்படுகிறதே...
உலகக்கோடி : "ஹரே ராம்... இது அபாண்டம்... நெல்லூர் மக்களின் வேலை வாய்ப்பை நான் பறிக்கவில்லை.. கொஞ்சம் நெல்லூர் சென்று பாருங்கள். அங்குள்ள இளைஞர்கள் கூட்டம் கஞ்சா அடித்துக் கொண்டிருப்பார்கள்... சாராயம் குடித்துவிட்டு பொண்டாட்டியை அடித்துக் கொண்டிருப்பார்கள்... மரத்தடியில் அமர்ந்து சீட்டு விளையாடி கொண்டிருப்பார்கள்... அல்லது ஏதாவது நடிகனின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டிருப்பார்கள்... இப்படிப்பட்ட இளைஞர்களை வைத்து நம் தேசத்தை முன்னோக்கி செல்ல முடியுமா? ஒவ்வொரு இளைஞனும் ஒத்துழைத்தால்தான் டிஜிட்டல் மந்தியூரை உருவாக்க முடியும்"
நிருபர் : நெல்லூரில் படித்துவிட்டு இளைஞர்கள் வேலையில்லாமல் அலைவதாகக் கூறுகிறார்களே.
உலகமோடி : "ஹரே ராம்... மூளையுள்ளவன் வேலைத் தேட மாட்டான்... பகோடா கடை வைத்தும் பிழைத்துக் கொள்வான்"
நிருபர் : அப்படியானால், இன்று நடந்த லாரி விபத்துக்கு காரணம் என்னானு சொல்லுங்க...
உலகக்கோடி : "இது திட்டமிட்ட சதி"
நிருபர் : இறந்தவர்கள் எல்லாரும் மந்தியூரை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறதே
உலகக்கோடி : "ஆமாம்"
நிருபர் : அவர்கள் நெல்லூர் போகவேண்டிய காரணம் என்ன?
உலகக்கோடி : மந்தியூர் குடிமகன் மந்தியூர் எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்பது நிருபர்களுக்கு தெரியாதா?
நிருபர் : நெல்லூர் மக்களின் வேலை வாய்ப்பை பறிக்கவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா?
உலகக்கோடி : "நெல்லூர் மக்கள் மிகவும் நல்லவர்கள்... இப்போது சில தீவிரவாதக் கும்பல் நெல்லூரில் ஊடியிருப்பதாக அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. மந்தியூரின் இறையாண்மைக்கு எதிராக ஈடுபடுவோர் வேட்டையாடப்படுவார்கள்... ஜெய் மந்தியூர்... மந்தியூர் மாதாக்கி ஜே ". 

நள்ளிரவு பாழடைந்த வீடு.தெருவிளக்கின் ஒளிக்கீற்று மெலிதாய் வீட்டின் விளிம்பை ஒட்டிஉரசிக் கொண்டிருந்தப் போதிலும் பாழடைந்த அந்த வீடு இருளோடு முயங்கியிருந்தது... .போலீசார் அந்த வீட்டை பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்ததனர்...

இது தெரியாமல்-கயல்விழி கண்ணயர்ந்து கிடந்தாள்... மதிவாணன் சில குறிப்புகளை குறித்துக்கொண்டிருந்தான்.
(காவலரின் சுற்றி வளைப்பில் சிக்கினார்களா, கயல்விழியும், மதிவாணனும்)
(தொடரும்)


உறங்காதே கண்ணாளா
- அரங்க கனகராசன்.
(கதைத் தொடர் 7)
முன்கதை :
பாழடைந்த வீடு காவல்துறை முற்றுகை

7 - அதிரடிப்படை உள்ளே நுழைந்தது!
---------------------------------------------------------
ஊடகவியலர் செய்தி சேகரிப்பில் மும்முரமாக இருந்தனர்...
கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
செய்தியாளர்கள் தத்தமது நிலையத்திற்கு நேரடி செய்தி வழங்கிக் கொண்டிருந்தனர்...
"கண்டிப்பாக அபிராமி... இப்போது மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளதை உங்களால் பார்க்க முடியும்... அதேப் போல், காவல்துறையினரும் தீவிரவாதிகளைப் பிடிக்க மிக நுணுக்கமாக ஆராய்ந்துக் கொண்டிருக்கிறார்கள்... நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த பங்களா சுமார் முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது... ஜமீன் பங்களா என்று மக்கள் சொல்கிறார்கள்...
இப்போது இந்த பங்களாவில் யாரும் குடியிருக்கவில்லை என்றும், பேய் நடமாட்டம் இருப்பதாகவும் உள்ளூர் மக்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.
பேய் நடமாட்டத்திற்கு பயந்து மக்கள் இந்த பங்களா பக்கம் யாரும் போவதில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுவதைப் போலவே இந்த பங்களா புதர் மண்டி இருப்பதை நம்மால் காண முடிகிறது...
செய்தி வாசிப்பாளர் :
காவல்துறைத் தரப்பில் என்ன சொல்கிறார்கள். உள்ளே எத்தனை தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று தகவல் ஏதும் கிடைத்ததா?
செய்தியாளர் :
பத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இருக்கக்கூடும் என்று காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது... இன்று மந்தியூர் லாரி வெடியில் சிக்கிய ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று உயர் அதிகாரிகள் நினைக்கிறார்கள். ஏனென்றால், லாரியை வெடிக்கச் செய்த வெடி மருந்து பொதுவாக இந்த மாதிரி தொழிற்நுட்பம் ராணுவத்திடம் மட்டுமே இருக்கக் கூடுமென்றும. அதனால் மிகுந்த பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள் உள்ளே பதுங்கியிருக்கலாம் என்றும் நினைக்கிறார்கள்...
செய்தி வாசிப்பாளர் :
கதிர், உள்ளே இருக்கும் தீவிரவாதிகள் எந்த அமைப்போடு தொடர்புடையவர்கள் என்று ஏதும் தகவல் கிடைத்ததா? தீவிரவாதிகளைப் பிடிக்க காவல்துறை எந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்... தீவிரவாதிகளோடு ஏதும் பேச்சு நடத்தப்பட்டதா?
செய்தியாளர் :
சரியாக கேட்டீர்கள் அபிராமி... காவல்துறைத் தரப்பில் இருந்து இதுவரைக்கும் அய்ந்து முறை அறிவிப்பு செய்திருக்கிறார்கள். தீவிரவாதிகளை சரணடையும்படி ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்தார்கள். ஆனால்; உள்ளே இருந்து தீவிரவாதிகளிடம் இருந்து எந்த சமிக்கையும் இதுவரை கிட்டவில்ல... காவல்துறை விதித்த கெடு முடிந்து விட்டதால், நன்கு பயிற்சிப் பெற்ற அதிரடிப் படையினரை பங்களாவுக்குள் அதிரடியாக அனுப்பும் முயற்சியில் காவல்துறை ஈடுப்பட்டிருக்கிறது... இதோ பாருங்கள்... அதிரடி படையின் ஒரு பிரிவு பங்களாவின் மேற்பரப்பில் ஊடுருவி செல்வதை நமது ஒளிப்பதிவாளர் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல், பங்களாவை சுற்றிலும் சுமார் ஏழு வழிகளில் கதவை உடைத்து உள்ளே நுழைய அதிரடி படையினர் தமது வேலையத் துவங்கி விட்டனர்...
(அதிரடிப் படையிடம் கயல்விழி, மதிவாணன் தஞ்சம் அடைந்தார்களா? மரணம் அடைந்தார்களா?)
(தொடரும்)


உறங்காதே கண்ணாளா
        - அரங்க கனகராசன்.
                               (கதைத் தொடர் 8)
முன்கதை :
அதிரடிப்படை வேட்டையில் குதித்தது... 

8 - எம் அய் டி  குண்டு வைத்து தகர்க்கப்பட்டது
 ----------------------------------------------------------------------
திடீர் பாய்ச்சலில் நுழைந்த அதிரடிப்படை, மதியழகனை சுற்றி வளைத்தது...

மண்டியிடச் செய்து மதியழகனின் கைகளைப் பின்புறம்  கட்டியது...

சில வீரர்கள் ஓரிடமும்  விடாமல் துழாவினர்...

பக்கத்து அறையில் கண்ணயர்ந்துத் தூங்கிக்  கொண்டிருந்த கயல்விழி, கதறக் கதற  குண்டுக் கட்டாகக்  கட்டித் தூக்கியது... 
அவ்விருவரையும் தரதரவென இழுத்து வந்து வாகனத்தில் ஏற்றியக் காட்சியை  ஊடகங்கள் செய்தியாக அனுப்பிக் கொண்டிருந்தன...

காவல்துறை அதிகாரி, உயர் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார் :

"...ஆமாங்க சார்... ரெண்டு தீவிரவாதி!... அதில் ஒரு பொண்ணு... வயசு பத்து இருக்கும்... ரெண்டு பேர் கிட்டையும்  எந்த ஆயுதமும் இல்லை..."

ஊர் மக்கள் திரண்டு, காவல் வாகனத்தை சுற்றி நின்று கூக்குரலிட்டனர்...

"காவல்துறையே... காவல்துறையே... கண் குருடான காவல்துறையே... பிடிக்காதே பிடிக்காதே அப்பாவிக்  குடும்பத்தைப் பிடிக்காதே"

"யோவ்... என்னய்யா சத்தம்" - காவல்துறை அதிகாரி.

"சார், நாம பிடிச்ச ரெண்டு பேருமே இந்த ஊர்வாசிகளாம்... அப்பனும், மகளும்!...  அப்பனுக்கு காது செவிடு... பொண்ணு நாலாம் வகுப்புப்  படிக்குது... மழையில் வீடு இடிஞ்சு தங்க வழியில்லாம, ஊர் மக்கள் பேச்சையும் மீறி, இந்த பேய் வீட்டில் தங்கியிருக்காங்க... நாம தீவிரவாதினு பிடிச்சிட்டோம்"   

தொலைக்காட்சி முக்கிய செய்தியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது...
"மந்தியூர் குண்டுவெடிப்பில்  பிடிபட்ட இருவருமே தீவிரவாதிகள் இல்லை என்ற திருப்புமுனைத் தகவல் தற்போதுக்  கிடைத்துள்ளது... நெல்லூரில் பெய்த கடும் மழையில், பலவீடுகள் இடிந்து விழுந்து சேதமாகியிருந்த நிலையில், மதிவாணன் என்பவர் தனது மகளோடு பாழடைந்த வீட்டுக்குள் தஞ்சமடைந்திருக்கிறார்..."

"எனக்கு காது செவிடுங்க... என்பொண்ணு நாலாம் வகுப்பு படிக்குதுங்க... எம்பொண்ணு வீட்டு பாடம் எழுதிட்டு தூங்கிட்டா... பொண்ணு எழுதியிருந்த வீட்டுப் பாடங்களை சரிபார்த்துட்டு இருந்தேன்... நூற்றுக்கணக்கில் போலீஸ் வந்து எங்களை பிடிச்சிட்டாங்க... எதுக்குன்னே எனக்குப் புரியலைங்க" 
மதிவாணன் பேட்டியை தொலைக்காட்சி ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில் -
அதை நிறுத்திவிட்டு இன்னொரு புதுச் செய்தி வந்தது...

'எம் அய் டி கல்வி நிலையம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது'

கயல்விழி வண்டியோட்ட, மதிவாணன் பின் இருக்கையில் அமர்ந்திருந்தான்..
(மந்தியூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் எம் அய் டி கல்வி நிலையம் ஏன் தகர்க்கப்பட்டது...)
(தொடரும்)


உறங்காதே கண்ணாளா
        - அரங்க கனகராசன்.
                               (கதைத் தொடர் 9)
முன்கதை :
தீவிரவாதிகள் தேடல் என்ற பெயரில் பத்துவயது சிறுமியை யும், அவளது செவிட்டுத் தந்தையையும் பிடித்தது காவல்துறை...

9 -  தற்கொலைக்கு பதிலடி! 
       ---------------------------------
ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த செய்தியை நிறுத்திவிட்டு தொலைக்காட்சியில் முக்கியச் செய்தி: 
எம் அய் டி கல்விநிலையம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது...

மந்தியூரின் மிகப் பெரிய கல்விநிலையம்.
குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே படிப்பும் வேலை வாய்ப்பும் வழங்கும் நிலையமாக இருந்தது...

பேராசியர்கள் குடியிருப்பும் அக்ராஹாரம் போல் இருந்தது.

கல்விநிலையமும் குடியிருப்பும் ஒரே நேரத்தில் தகர்க்கப்பட்டதோடு சில துண்டு அறிக்கைகளின்  சிதறல் காவலர்கள் சேகரித்தனர்...

'கல்விப் பயில வந்த பர்வீன் என்ற இசுலாமிய பெண்ணின்  தற்கொலைக்கு பதிலடி! மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் எம் அய் டி குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் ஆனது அல்ல!'.

அந்த துண்டறிக்கையின் நகல் உடனடியாக மேலிடத்திற்கு அனுப்பிய காவல்துறை, விரைவில் தீவிரவாதிகளைப் பிடித்து விடுவோம் என்றது!....

மிகக் கச்சிதமாக வேலையை முடித்த கயல்விழி இருசக்கர வாகனத்தை கிளம்பினாள்...

மதியழகன் ஓடிச்சென்று பின்னிருக்கையில் அமர, வண்டி வேகம் எடுத்தது....

வண்டியின் வேகத்தை  மிஞ்சும் வகையில் கூர்கொண்ட பார்வையை பாதையில் செலுத்தி வண்டியை மிக வேகமாக  மெல்லிய மழைச் சாரலினூடே மலையை நோக்கித் திருப்பினாள்...

"மதி, தாகமாகுது"

குடிநீர்ப் புட்டியைத் திறந்து நீட்டினான்...

ஒற்றைக் கையில் வண்டியோட-
மறுகையால் நீர் பருகினாள்...

அப்போது மலைவளைவில் எதிரில் வந்த காவல்துறை வாகனத்தின் மீது கயல்விழியின் வண்டி மோதியது...

(இருவரும் காவல் துறையிடம் சிக்கினார்களா?)
(தொடரும்)

--------------------------------------------------------------------------------

உறங்காதே கண்ணாளா
- அரங்க கனகராசன்.
(கதைத் தொடர் 10)

முன்கதை :
காவல்துறையின் வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது.

10 - காவல்துறையிடம் சிக்கியது தடயம்
--------------------------------------------------------
காவல்துறை வாகனத்தின் மோதி, இருசக்கர வாகனம் மோதியதுமே மதியழகன் மின்னலென செயல்பட்டான்...
கயல்விழியை கட்டிப்பிடித்துக் கொண்டு திடீர் பாய்ச்சல் போல் எம்பி தாவினான்...
ஒருவரோடு ஒருவர் ஒட்டிய நிலையில் செங்குத்தான மலைச்சரிவில் உருண்டார்கள்...
எந்தப் பிடிமானமும் கைக்குக் கிட்டாத சூழலில் இருவருமே உருண்டு கொண்டிருந்தார்கள்...
இருசக்கர வாகனம் மோதியதுமே சட்டென கடிவாளம்போட்டு வண்டியை நிறுத்தினார்...
மலைச்சரிவு என்பதால் இருசக்கர வாகனத்தையும் சேர்த்து இழுத்துச் சென்று வாகனம் நின்றது...
வாகனத்தில் இருந்து இறங்கிய ஆய்வாளரால் என்ன நடந்தது என்று ஊகிக்க முடியவில்லை...
இருசக்கர வாகனம் மோதியது... ஆனால்; எவரையும் காணவில்லை... வாகனம் காவல் துறையின் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிக் கிடந்தது...
பார்வையை அக்கம்பக்கம் சுழற்றினார்...
வண்டியை ஓட்டி வந்தவர்கள் எங்கே? யார்? அவர்களுக்கு என்னவாயிற்று?...
கண்கள் துளாவின... யாரும் தென்படவில்லை..
சிறுது நேரத்தில் வாகன ஓட்டிகள் ஓரிரண்டு பேர் கூட, அவர்களின் உதவியோடு சக்கரத்தின் அடியில் சிக்கியிருந்த இருசக்கர வாகனம் வெளியே இழுக்கப்பட்டது...
இருசக்கர வாகனத்தை ஆய்வாளர் ஆய்ந்தார்...
சில துண்டறிக்கைகள் கிடைத்தன : 'கல்விப் பயில வந்த பர்வீன் என்ற இசுலாமிய பெண்ணின் தற்கொலைக்கு பதிலடி! மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் எம் அய் டி குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் ஆனது அல்ல!'
அதைப் படித்த ஆய்வாளர் திடுக்கிட்டார்... அவரின் தேடல் சுறுசுறுப்பானது...
மலைப்பாதையின் தடுப்புச்சுவர் அருகே ஒரு குப்பி கிடந்தது...
அது போராளிகள் பயன்படுத்திடும் சயனைட் குப்பி...
(மலைச்சரிவில் உருண்ட மதியழகன், கயல்விழி நிலை என்ன?)
(தொடரும்)


  


    

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்